Share via:
விஜய் ஆட்சியின் 100 நாள் சாதனைகள் மற்றும் சுதந்திர தின நாள்
கொண்டாட்டத்திற்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விஜய்யின் அதிரடி அரசியலை ஸ்டாலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தனிமனித
தாக்குதல் மற்றும் நடிகை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதுள்ளார் என்று தவெகவினர் கிண்டல்
செய்கிறார்கள்.
முரசொலி தலையங்கத்தில், ‘’சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய
முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல்
ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள
காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும்
அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த
நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.
மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா,
பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.
கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்.
“எல்லோரும் வாக்களித்து விட்டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து
முதலமைச்சர் ஆக்கிவிட்டோம், எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும்
ஒதுங்கிப் போய்விடாதீர்கள். இனி நீங்கள் நம்முடனே, அரசுடனே இருக்க வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால்
செயல்படுத்த முடியும்” என்று அழுது புலம்பி இருக்கிறார்.
இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி
வாக்களித்தவர்கள், ‘தவறு செய்துவிட்டோம்’ என்று வருந்திக் கொண்டு இருக்கிறார்கள்.
10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது
அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு. ‘நீங்க ஆக்ஷன் ஹீரோ… தப்பு நடந்தா நடவடிக்கை
எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம்’ என்று ஒரு பெண் கதறினாரே. இப்படி
பல பேரும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம்
சூட்டிக் கொண்டு இருக்கிறார் விஜய். ஜனநாயகன் படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா
தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை
தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யப்
போகிறாராம். ‘லியோ’ படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமிதான் முதலமைச்சரின்
தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு
செய்தவருக்கு பதவி. இதுதான் நடக்கிறது. இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள்
மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?
‘விஜய் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்பதற்காக ஏறிய மின்சாரக்
கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்களா மக்கள்? ‘விஜய் அழகாகச் சிரிக்கிறார்’ என்பதற்காக
‘சொத்து வரியை எவ்வளவு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விடுவார்களா
தமிழ்நாட்டு மக்கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்தாமல் தனிமனித தாக்குதலில் திமுக
இறங்கியிருப்பது, அவர்களுடைய இயலாமையைக் காட்டுகிறது. பயந்துட்டீங்களா ஸ்டாலின் என்று
தவெகவினர் குரல் எழுப்புகிறார்கள்.