Share via:
காவிரி தண்ணீருக்கும் மேகதாது அணைக்கும் நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில்
திமுக விவாதிக்க அனுமதி கேட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படி மற்றும் காவிரி நதி
நீர் ஒப்பந்தங்களின்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தர, தமிழ்நாடு
அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம்
9.19 டி.எம்.சி. திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது
2.92 டி.எம்.சி. மட்டுமே. கொடுக்க வேண்டிய சுமார் 68% தண்ணீர் கொடுக்கவில்லை கர்நாடகா
அரசு.
சரி இந்த மாதம்? ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. கிடைக்க வேண்டும்.
ஆனால் சென்ற 19ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கிடைத்திருப்பது வெறும் 3.75 டி.எம்.சி.
தண்ணீர் மட்டுமே. ஆனால், விஜய் இதுவரை வாய் திறக்கவே இல்லை.
ஜனநாயகன் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடுவதற்காகவே விஜய் அமைதி
காக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து,
அதையும் ஏமாற்றிவிட்டார். தண்ணீர் இல்லாமல் விவசாயமும் செய்ய முடியவில்லை என்று கண்ணீர்
வடிக்கிறார்கள்.
இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு
தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையம் கைவிரித்துள்ளது. ஏற்கனவே மேட்டூர்
அணையிலிருந்து தண்ணீர் திறப்பு என்பது இன்னும் செய்யப்படாமல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில்
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இதனால் ஏற்பட்டுள்ளது.
திமுகவினர், ‘’உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல்
சாசன சட்டத்திற்கு எதிராகவும் நடந்துகொள்ளும் கர்நாடகா அரசை கண்டிக்க தவெக அரசு தயங்குவது
ஏன்… அதைப்பற்றிப் பேசாத நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், ஜூலை 23-ம் தேதி ரிலீஸாகும்
ஜனநாயகன் திரைப்படத்தை திருவிழா போலக் கொண்டாடுங்கள் என்கிறார்! ஆக, ஜனநாயகன் படம்
கர்நாடகாவில் எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என கர்நாடகா தரமறுக்கும் காவிரி
தண்ணீரை கேட்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டீர்களா முதல்வரே?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய்?
