Share via:
குதிரை பேரம் பற்றி முதல்வர் விஜய்யிடம் கேள்வி கேட்க ஆளுநர் முடிவு
எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக
வெற்றி கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியன குதிரை பேரம், எம்எல்ஏக்களை
விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை புகாராகத்
தெரிவித்தன.
ஆளுநரை நேரில் சந்தித்து அதிமுகவினர் கொடுத்த மனுவில், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைப் பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள்
மற்றும் மிரட்டல்கள் மூலம் தவெக அரசு தங்கள் கட்சிக்குள் இழுத்துள்ளது. இந்த ஜனநாயகப்
படுகொலை குறித்து ஆளுநர் மவுனம் காக்கக் கூடாது, உடனடியாக சட்டப்பிரிவு 167-ன் கீழ்
அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதேபோல் திமுக தரப்பிலிருந்து ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவும்,
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்துத் தங்களின்
புகார்களைப் பதிவு செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளையும், சட்ட வல்லுநர்களையும்
சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சிகள் அளித்த தொடர் புகார்களின் மீதான சட்டப்பூர்வ
சாத்தியக்கூறுகள் குறித்தே இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டெல்லியிலிருந்து திரும்பிய உடனேயே, ஆளுநர் மாளிகையான ராஜ் பவன்
இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 167-ன் படி,
மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி நிர்வாகம், சட்ட மசோதாக்கள் மற்றும் அமைச்சரவை முடிவுகள்
குறித்த எந்தவொரு தகவலையும் முதல்வரிடம் கேட்டுப் பெறும் முழு அதிகாரம் ஆளுநருக்கு
உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் குதிரை பேரம்
குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு முதல்வர் விஜய்க்கு ஆளுநர் முறைப்படி கடிதம்
அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு விஜய் பதில் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விவகாரம் சூடு
பிடிக்கும்.