Share via:
டாஸ்மாக் ஊழியர்கள் முகமூடி போட்டுக்கொண்டு போராடினாலும் ஒரு ரூபாய்
கூட திருட விட மாட்டோம் என்று அமைச்சர் விக்னேஷ் பேசியிருப்பது படு சர்ச்சையாகியுள்ளது.
அதோடு அவர், ‘’டாஸ்மாக் பாட்டிலுக்கு 10ரூபாய் மேல் வாங்குவதை
உடனடியாக சினிமாவை போல சரியை செய்ய முடியாது அதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் புதிய திட்டத்தை
செயல்படுத்தி பிறகு கொண்டு வருவோம் அதுவரை 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குவதில்
சட்டம் சிக்கல் உள்ளது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு என்பது
தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது; படிப்படியாக கோரிக்கை நிறைவேற்றப்படும்’’
என்று கூறியிருக்கிறார்.
இதற்கு திமுகவினர், ‘’திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய்
வாங்கினால் மேலிடம் செல்கிறது. ஆனால், விஜய் ஆட்சியில் 10 ரூபாய் வாங்குவது அங்கு பணிபுரியும்
ஊழியர்களுக்காக என்று அமைச்சரும் மற்றவர்களும் பேசியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில்
பாட்டுப்பாடிய விஜய் இப்போது சும்மா இருப்பது ஏன்’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்படி, ’’டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பது தெரிய வந்தால்
முதல் முறையாக தற்காலிக நீக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது முறை கண்டறியப்பட்டால்
தற்காலிக நீக்கம் செய்வதோடு அபராதம் வசூலிக்க வேண்டும் மேலும் தொகுப்பூதியம் வழங்கப்பட
மாட்டாது. மூன்றாவது முறையாக பணம் வாங்குவது தெரிய வந்தால் நிரந்தரமாக பணி நீக்கம்
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட
மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் ஊழியர்களோ, இவை எல்லாம் ஏற்கெனவே இருக்கும் கெடுபிடிதான்.
சும்மா அறிக்கை விடுவது எல்லாமே கண் துடைப்பு என்கிறார்கள்.
