Share via:
சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் கண்டிப்பாக இடம் இல்லை
என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, இனியும் காத்திருப்பதில்
பயன் இல்லை என்று சசிகலாவும் பன்னீரும் இணைந்து புதிய இயக்கம் உருவாக்கி 50 தொகுதிகளில்
போட்டியிட திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது.
டி.டி.வி. தினகரன் பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்
தன்னை இணைத்துக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கும் – அமமுகவுக்கும்
இடையேயான பிரச்சனை அண்ணன்-தம்பி இடையே நடந்தது. திமுகவை வீழ்த்த நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்
என கூறி இருவரும் ராசியாகிவிட்டார்கள்.
இதே பாணியில் சசிகலாவுக்கும் பன்னீருக்கும் எண்ட்ரி கிடைக்கும்
என்று நினைத்தார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
கடந்த தேர்தலில் ஒதுங்கியிருந்தது போன்று இல்லாமல் இந்த தேர்தலில்
தன்னை நிரூபிக்க நினைக்கிறார். எனவே, தனது ஆதரவாளர்களை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் இணைந்து பணியாற்றலாமா?
அல்லது புதிய கட்சியை தொடங்கலாமா? என்ற ஆலோசனையில் ஆதரவாளர்களுடன் ஈடுபட்டு வருவதாக
கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியாக தவித்து வரும் ஓ. பன்னீர் செல்வத்தை இணைத்துக்கொண்டு
புதிய இயக்கம் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. புதிய கட்சி
தொடங்கிவிட்டால் அதிமுக தொடர்பான வழக்குகள் சிக்கலாகக்கூடும். எனவே, ஜெயலலிதாவின் பிறந்தநாளான
பிப்ரவரி 24ம் தேதி சசிகலா தலைமையில் புதிய இயக்கம் உருவாகும் என்கிறார்கள்.
அதேநேரம், மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு பாஜக மூலம் அழுத்தம்
தொடர்ந்து கொடுக்கப்பட்டுவருகிறது. சேர்க்கவில்லை என்றால் தென் மாவட்டங்களில் 50 தொகுதிகளில்
போட்டியிட்டு தங்கள் பலத்தைக் காட்டுவதற்கு சசியும் பன்னீரும் ரெடி என்று கூறியிருக்கிறார்கள்.
எடப்பாடி இதற்கு பதில் சொல்வாரா..?
