Share via:
பாமகவின் ஒழுங்கு குழு அறிக்கையின்படி அடிப்படை உறுப்பினர் பதவியில்
இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இனி அன்புமணியுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது
என்று ராமதாஸ் கொடுத்துள்ள அறிவிப்பு தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன்
தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு
வருகிறது.
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு
பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு
பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காத நிலையில் அன்புமணி
பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இன்று ராமதாஸ், “கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர்
பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவு
எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க
2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும்
அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.
பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு
தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி. பாமகவைச் சேர்ந்த யாரும் அன்புமணியுடன்
எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
`நான் வளர்த்த பிள்ளைகள்தான் அன்புமணியுடன் இருக்கிறார்கள். அவர்கள்
தனிக்கட்சியாக செயல்படுவதுபோல் உள்ளனர். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை
மன்னித்து விடுகிறேன். தந்தை சொல்லைக்கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் சிலர்
அன்புமணிக்கு அறிவுரை வழங்கினார்கள். பழ. கருப்பையா கூட அறிவுரை வழங்கி இருக்கிறார்.
ஆனால் அதை அன்புமணி எதையும் மதிக்கவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம்.
46 ஆண்டுகாலம் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கிலே தண்ணீர், உணவின்றி
நடந்து 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். 2002-லிருந்து கட்சியில்
சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து வருகிறேன். ஆனால் அதற்கு அன்புமணி ஆதரவு
தெரிவிக்கவில்லை.
அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது.
அரும்பாடு பட்டு வளர்த்த பாமக என்ற கட்சி அன்புமணியால் அழிகிறது. பாமகவுக்கு இது பின்னடைவு
கிடையாது. களையை மட்டுமே நீக்கி உள்ளோம். பாமகவை உரிமை கோர அன்புமணிக்கு உரிமையில்லை”
என்று பேசியிருக்கிறார்.
அன்புமணி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.