Share via:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர்
சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி
மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’அரசின்
சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய
கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றன, இதுதான் திமுகவின் சமூகநீதியா?
அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான
துணிச்சல் எங்கிருந்து வந்தது? மற்ற மதங்களைப் பாதுகாத்து இந்துமதத்தைத் தொடர்ந்து
தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக ஆட்சியில், இந்துக்களை மதமாற்றம் செய்தால் அரசு
எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா? அல்லது திமுகவே இதுபோன்ற மதமாற்றவாதிகளுக்குப்
படியளந்து இந்துமதத்தை அழிக்க முயற்சிக்கிறதா? அதிலும் மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளைப்
பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது கோரத்தின் உச்சமல்லவா?
சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய
மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை
நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது.
விடுதி காப்பாளர் லட்சுமி விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும்,
மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப்
பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் புகார் அனுப்பிய பிறகும்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.