Share via:
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரிவிதிப்பால் திருப்பூர்,
ஈரோடு ஜவுளித் தொழில் சர்வநாசமாகிவிடும் என்று உற்பத்தியாளர்கள் கதறுகிறார்கள். இதனால்
என்ன நடக்கப்போகிறது என்பதே புரியவில்லை, இந்த தீபாவளி மேற்கு மாவட்டங்களில் ரண வேதனையை
ஏற்படுத்த போகிறது என்று புரியாமல் விழிக்கிறார்கள்.
இந்நிலையில் ஜவுளி ஆலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்
கட்சி போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகிவருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா
4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜவுளி பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு
பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் போன்ற உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கும்
என தெரியவந்துள்ளது.
அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்ற பிரதமரின் பேச்சு
வழக்கமான வாய்ச்சவடாலாகி நின்று விடக்கூடாது. அரசியல் உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும்.
அமெரிக்க அரசின் வரிவிதிப்பு, தமிழ்நாடு முழுவதிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்
என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு, தொழில்களின் ஏற்றுமதி பாதிக்காமல் தொடர்ந்து
நடைபெற, பொருத்தமான மாற்றுத் திட்டத்தையும், வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களையும்
உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய
அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாட்டின் எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு
கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அரசு
தொடர்ந்து மிரட்டி நிர்பந்தித்து வந்தது. அமெரிக்காவின் நவீன காலனி ஆதிக்கக் கொள்கைக்கு
இந்தியா துணை போகக் கூடாது என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் நமது நாட்டின் ஜவுளி, பின்னலாடை,
ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல் மற்றும் தோல் பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள்
என பல பிரிவுகளில் உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக
ஏற்றுமதியில் 66 சதவிகித வீழ்ச்சி ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்
4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்றுமதியை சார்ந்து நடைபெறும் தொழில்களில் 70 சதவிகிதம்
உற்பத்தியை வெட்டிக் குறைக்க வேண்டும் என்பது பல்லாயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு
பறிபோகும் பேரபாயம் கொண்டதாகும். நாட்டின் சுய பொருளாதாரத்தை கடுமையாக தாக்கி, நவீன
காலனி ஆதிக்கப் பிடியில் நாட்டை சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட டிரம்ப் அரசின் வரிவிதிப்பு
தாக்குதலை எதிர்த்து, அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல் நாட்டின்
இறையாண்மையை, சுயசார்பை பாதுகாக்கும் அரசியல் உறுதியுடன் ஒன்றிய அரசு எதிர் கொள்ள வேண்டும்.
ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தித்
தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்கி
உதவ வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்புக்
கொள்கையை கண்டித்தும் இடதுசாரி கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்),
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
) விடுதலை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர்,
மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில்
வரும் செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து மோடி வாய் திறக்கவே
இல்லை என்பதுதான் வேதனை.