Share via:
பாஜகவில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த குஷ்புக்கு திடீரென
துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அதிருப்தியில் இருந்த குஷ்பு எந்த நேரமும்
விஜய் கட்சியில் சேர்ந்துவிடும் எண்ணத்தில் இருந்தார் என்றும், அதை தடுத்து நிறுத்தவே
இந்த பதவி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனாலே இந்த பதவி கொடுத்ததும் விஜய் குறித்து குஷ்புவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘’விஜய் இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். என் தம்பியான அவருக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். அரசியலில் இல்லாமல், வெளியில் இருந்துகொண்டு ‘அரசியல் இது
சரி இல்லை; அது சரி இல்லை’ என சொல்வதை தாண்டி, உள்ளே வந்து களத்தில் இறங்கி, வேலை செய்தால்
தான் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எந்த அளவுக்கு அதில் உழைப்பு இருக்கிறது
என்று தெரியவரும் என்றவர் அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் நயினார் நாகேந்திரனுக்கு மட்டும்
நன்றி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர், ‘’எனக்கு எதிர்பார்ப்பு இல்லை. அதே நேரத்தில்
கட்சிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அதற்கான ஆசை இருந்தது.
எந்த நேரத்தில் வர வேண்டுமோ அந்த நேரத்தில் அது நிச்சயம் வரும். பொறுமை மிக மிக அவசியம்.
பொறுமையாக இருந்தேன். இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியமான அறிவிப்பு தான். இந்தப் பொறுப்பு
மிகப்பெரிய பொறுப்பு. எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,
மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் மனமார்ந்த நன்றி’’ தெரிவித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் சரத்குமாருக்கு பதவி கொடுக்கப்படாதது கடுமையான
எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது. ஆனால், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜகவுக்கு
வந்த சரத்குமாரின் ஆதரவாளர் சுந்தருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தேசிய அளவிலான பதவியை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆகவேதான்
அவர் பெயர் பட்டியலில் இல்லை என்கிறார்கள்.
அதேபோல் அண்ணாமலைக்கும் தேசிய அளவிலான பதவியே கிடைப்பதற்கு வாய்ப்பு
உண்டு என்கிறார்கள். இந்த நியமனத்தில் விளவங்கோடு விஜயதரணிக்கு மட்டுமே பெருத்த ஏமாற்றம்
என்கிறார்கள். அடுத்து வேற கட்சிக்கும் தாவ முடியாமல் கட்சியிலும் மரியாதை கிடைக்காமல்
விஜயதரணி நிலைமை பரிதாபம்தான்.