Share via:
பாஜகவுடன் கூட்டணி அமைந்ததில் இருந்து அதிமுகவில் எக்கச்சக்க குழப்பம்
நடந்துவருகிறது. இதில் உச்சபட்சமாக மூத்த தலைவர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து வெளியேறி
தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் சில தலைவர்கள் விலகக்கூடும் என்று பேச்சு எழுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில நாளிதழுக்குத் தெளிவாகப் பேசியிருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி.
கேள்வி ; பாஜகவுடனான கூட்டணியை 2023-ம் ஆண்டில் முறித்துக்கொண்ட
பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு
பிறகு அமையவுள்ள கூட்டணி ஆட்சியில் தாங்களும் அங்கம் வகிப்போம் என்று பாஜக தலைமை திரும்பத்
திரும்ப கூறி வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் ரோட் ஷோவின்போது பேசிய நீங்கள்
‘ஆட்சியில் பங்கு கொடுக்க, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல’ என்று கூறியிருக்கிறீர்கள். கூட்டணி ஆட்சி விஷயத்தில் உங்கள் நிலையை தெளிவுபடுத்த
முடியுமா?
பதில் : நான் அந்த அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை. அதிமுக –
பாஜக கூட்டணியை பலவீனப்படுத்த அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்ற ஒரு விஷமப் பிரசாரத்தை
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த பிரசாரத்துக்கு
பதில் அளிக்கும் வாகையில்தான் நான் அப்படி கூறினேன்.
கேள்வி : தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில்லை. இந்த
சூழலில் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் பாஜக தலைமைக்கு நீங்கள் சொல்லும் தகவல் என்ன?
பதில் : தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழகத்தை ஒரே கட்சி தனிப்
பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதைத்தான் விரும்புகிறார்கள். மக்களின் விருப்பப்படி தமிழகத்தில்
பல ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி முறைதான் நடந்து வருகிறது. இதுவே 2026-ம் ஆண்டிலும் தொடர
வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் எங்கள் விருப்பமும் இதுதான். மக்கள் விருப்பத்தை
பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன்
ஆட்சி அமைக்கும்.
கேள்வி : கூட்டணி ஆட்சி விவகாரத்தில்
உள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக பாஜக தலைமையிடம் பேசுவீர்களா?
பதில் ; எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தங்கள் கட்சி
தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஆட்சியில் பங்குபெறுவோம் என்று தலைவர்கள் பேசுவது வழக்கமான
விஷயம்தான். அதிமுக – பாஜக கூட்டணியை முறிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி 100 சதவீதம் ஒற்றுமையாகத் தொடர்கிறது.
கேள்வி ; விஜய்யின் தமிழக
வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியுள்ளதா?
பதில் ; இதுவரை அப்படி எந்த பேச்ச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
கேள்வி : உங்கள் கூட்டணியில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுப்பீர்களா?
பதில் : மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துகளை கொண்ட
அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் இணைய வேண்டும்.
கேள்வி ; இது தவெகவுக்கும் பொருந்துமா?
பதில் ; திமுகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் விஜய்யும் விரும்புகிறார்.
இந்த அழைப்பு அவரது கட்சிக்கும் பொருந்தும்.
கேள்வி : சீமானின் நாம் தமிழர் கட்சி?
பதில் ; திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளும்
இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன.
இந்த விஷயத்துக்கு அதற்குள் ஒரு தெளிவு பிறக்கும்.
கேள்வி ; பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் உங்கள் கூட்டணியில் எப்படி
இணையும்?
பதில் : 1999 நாடாளுமன்ற தேர்தலிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும்
இதுபோல் நடக்கவில்லையா?
கேள்வி : அதிமுக – பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிடையே ஒத்துழைப்பு
உள்ளதா?
பதில் : என் எழுச்சிப் பயணத்தில் பாஜக தலைவர்களும் தொண்டர்களும்
பெருமளவில் பங்கேற்று வருகிறார்கள். கூட்டணி கட்சியின் தொண்டர்களிடையே நல்ல எழுச்சி
உள்ளது.
கேள்வி : பாமகவில் ராமதாஸுக்கும், அவரது மகனுக்கும் இடையே நடக்கும்
மோதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : அவர்கள் கட்சி விவாகாரத்தில் தலையிட நான் விரும்பவில்லை.
எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன்.
கேள்வி : அரியலூருக்கு வரும் பிரதமர் மோடியை சந்திப்பீர்களா?
பதில் : அதுபற்றி நான் விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்
பிரதமர் மோடியுடன் எடப்பாடி மேடை ஏறிய பிறகு இந்த கூட்டணிக் குழப்பங்கள்
அனைத்தும் முடிந்துவிடும் என்று இரண்டு கட்சியினரும் நம்புகிறார்கள். பார்க்கலாம்.