Share via:
அண்ணாமலை இல்லைன்னா தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு
எதிர்காலமே இல்லை என்று ஒரு கும்பல் சத்தமாக முழங்கிவந்தனர். அண்ணாமலையை மாத்துவதற்கு
மோடியாலே முடியாது என்றும் சவுண்டு கொடுத்தார்கள். ஆனால், எடப்பாடி வேண்டும் என்றால்
அண்ணாமலையை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை பா.ஜக.வுக்கு வந்தது. அண்ணாமலையை விட எடப்பாடியே
முக்கியம் என்று பா.ஜ.க. முடிவு செய்து அறிவித்தும் விட்டது.
இந்த நிலையில் இனி பழைய பா.ஜ.க. தலைவர் என்ற
பந்தாவை எந்த விதத்திலும் அண்ணாமலை காட்டக் கூடாது என்பதை நேரடியாகவே சொல்லும் வகையில்,
அண்ணாமலை போட்டிருந்த சபதத்தை முடித்து வைத்து முடிவுரை எழுதியிருக்கிறார் நயினார்
நாகேந்திரன்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு அண்ணாமலை, திமுக
மீது கடுமையாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவது
இல்லை என்று அறிவித்தார். அண்ணாமலை அதன்பிறகு பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் செருப்பு
அணியாமல் வெறும் காலில் வந்ததை காண முடிந்தது. இதை பார்த்த அண்ணாமலை ஆதரவாளர்கள்,
‘இப்படிப்பட்ட தியாகி யாராவது உண்டா?’ என்று அவரது கால்களைக் காட்டிக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன்
பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் அண்ணாமலைக்கு கட்டளை போட்டார். ‘’அண்ணாமலை காலில் செருப்பு
இல்லாமல் இருக்கிறார்.. அவர் இனி காலில் செருப்பு அணிய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
ஏனெனில் 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதால் அண்ணாமலை இன்றே காலணி
அணிந்து கொள்ளலாம்’’ என்று கூறியதுடன் நில்லாமல் அண்ணாமலைக்கு செருப்பையும் மேடையிலேயே
வழங்கினார். நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் வழங்க அதனை மறுக்கமுடியாமல்
அண்ணாமலை செருப்பு அணிந்து கொண்டார்.
இப்போது செருப்பு அணியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் அணிய
முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாமலை இது குறித்து, ‘’இன்று முதல் நான் பாஜகவின்
சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை
ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில்
2026ஆம் ஆண்டு திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
முதல் நாளிலேயே நயினார் நாகேந்திரன் யார்க்கர் பந்து வீசி அண்ணாமலையை அவுட் ஆக்கிவிட்டார்.