Share via:
வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது. கத்தி மீது நடப்பது போன்று
காவல் துறை கையாண்டதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், ரத்த மாதிரி தராதது, டிஎன்ஏ டெஸ்ட்களுக்கு
ஒத்துழைக்காமை மற்றும் உள்ளுர் ஊர் கட்டுக்கோப்பு ஊர் கட்டுப்பாடு என எக்கச்சக்க கட்டுப்பாடுகளைத்
தாண்டி காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது.
இதற்காக 87 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட 1லட்சத்துக்கும் மேற்பட்ட
செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, 293 சாட்சிகளிடம் விசாரித்து, இதில் சந்தேகத்திற்குரிய
மூன்று நபர்களின் மொபைல்களில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மொபைல் அழைப்புகளை
மீண்டும் மீட்டெடுத்து வேங்கை வயல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பஞ்சாயத்தில் உள்ள வேங்கைவயல்
கிராமத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டியில் மலம்
மிதந்ததாக கடந்த 26.12.2022 அன்று கனகராஜ் என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின்
பேரில் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 20.01.2025 அன்று புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில்
எதிரிகள் 1 முரளிராஜா 32/23, த/பெ ஜீவானந்தம், வேங்கைவயல், 2 முத்துகிருஷ்ணன்,
22/23, த/பெ கருப்பைய்யா வேங்கைவயல். 3 சுதர்சன், 20/23, த/பெ பாஸ்கரன், வேங்கைவயல்
ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முரளிராஜா என்பவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,
சம்பவத்தன்று தான் பணிக்கு சென்றுவிட்டதாகவும் தனக்கு சம்பவம் பற்றி எந்த விபரமும்
தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும் சுதர்சன் என்பவரை விசாரணை செய்தும் அவரது செல்போனை
கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியும் ஆய்வு அறிக்கை பெறப்பட்டது. அந்த
ஆய்வு அறிக்கையில் சம்பவத்தன்று நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து அவரது போனில் எடுக்கப்பட்ட
போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. தடய அறிவியல் ஆய்வகத்தின் மூலம்
போட்டோக்கள் மீட்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்தததில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரியவந்தது.
26.12.2022 ம் தேதி காலை 07.34.59 மணிக்கு தண்ணீர் தொட்டி முழுவதும்
நீரால் நிரப்பப்பட்டு தண்ணீரில் எவ்வித மலத்துண்டுகளும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.
07.35.21 மணிக்கு முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி மேலே செல்பி எடுத்துக்கொண்ட போட்டோ பதிவு.
07.35.22 மணிக்கே வெள்ளை
நிற பிளாஸ்டிக் கவரில் மனித மலம் உள்ள புகைப்படம். 07.53.04 மணிக்கு முரளிராஜா தண்ணீர்
டேங்க் மேலே உட்கார்ந்துகொண்டும் சுதர்சன் வீடியோ எடுத்துக்கொண்டும் முத்துக்கிருஷ்ணன்
சிரித்துக்கொண்டும் உள்ள வீடியோவில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் மலம் உள்ளது. அப்போதும்
நீர்தேக்க தொட்டியில் மலம் மிதக்கவில்லை. ஆனால் அச்சமயத்தில் முரளிராஜா நீரில் இருந்த
மலத்தை சேகரித்ததாக உண்மைக்கு புறம்பாக கூறுகிறார்.
பின்பு முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவின் செல்போனில்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 09.24 IST மணிக்கு எடுக்கப்பட்ட போட்டோவில் ஒரே ஒரு
மலத்துண்டு மட்டும் இருந்துள்ளது. மேற்கண்ட நீர்த்தேக்க தொட்டியில் சுதர்சனால் எடுக்கப்பட்ட
போட்டோக்களில் உள்ள தண்ணீரில் எவ்விதமான மலத்துண்டுகளும் இல்லை. இவர்கள் இறங்கி வந்த
பின்புதான் தண்ணீரில் மலத்துண்டு இருந்துள்ளது.
பின்னர் மீண்டும் முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறி சென்று
09.27 மணிக்கு தனது செல்போனில் எடுத்த போட்டோவிலும் ஒரு துண்டு மலம் புதிதாக கிடக்கிறது.
முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறி சென்று 09.27 IST மணிக்கு தனது செல்போனில்
எடுத்த போட்டோ ஆகவே முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் உள்ள தண்ணீரில் எவ்விதமான மலத்துண்டுகளும்
இல்லை. இவர்கள் இறங்கி வந்த பின்புதான் தண்ணீரில் மலத்துண்டு இருந்துள்ளது.
சம்பவத்தன்று காலை 05.00 மணி முதல் மோட்டார் மூலம் நீர்தேக்க தொட்டிக்கு
நீர் ஏற்றப்பட்டு காலை 07.30 மணியளவில்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வல்லுநர்களின்
கூற்றுப்படியும் பரிட்சாத்த செய்முறை நடத்தியதன்படியும் 26.12.2022-ம் தேதி காலை
05.00 மணிக்கு முன்பு தண்ணீரில் மலம் போட்டிருந்தால் தண்ணீர் விழும் வேகத்தில் தொட்டிக்குள்
இருந்த மலம் சிதறிக் கரைந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு மலத்துண்டு மட்டும் மிதந்து
கொண்டிருந்தால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்திய பின்புதான் போடப்பட்டுள்ளது என்பது தெரிய
வருகிறது.
மேலும் சுதர்சனின் செல்போனில் இருந்து தடய அறிவியல் ஆய்வகத்தால்
எடுக்கப்பட்ட ஆடியோ பதிவில் அவரது அம்மா சுலோச்சனா மற்றும் அத்தை வள்ளிகண்ணு ஆகியோரிடம்
அவர் பேசிய ஆடியோ குரல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவர்களுடைய குரல் மாதிரி பரிசோதனைக்கு
உட்படுத்தி அறிக்கை பெற்றதில் அதில் உள்ள குரல்கள் மேற்கண்ட நபர்களுடையதுதான் என்று
நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தடய அறிவியல் ஆய்வத்தின் அறிக்கையிலிருந்தும் மற்றும்
இதர அறிக்கைகளிருந்தும் வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன்
ஆகியோர் குற்ற செயலில் ஈடுப்பட்டார்கள் விசாரணை வட்டாரங்களில் தெரியவருகிறது.
ஆனாலும், இப்போது கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தை தி.மு.க. நிச்சயமாக சிபிஐ
வசம் ஒப்படைக்கப்போவதில்லை. எனவே, இதை காரணம் காட்டி திருமாவளவன் கூட்டணியை விட்டு
வெளியே வரவேண்டும் என்று அவரது கட்சியினர் கடுமையாக குரல் எழுப்புகிறார்கள்.
என்ன செய்யப்போகிறார் திருமாவளவன்.?