Share via:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகும் நிலையில், ‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம்
தமிழ்நாட்டில்தான் இருக்கும்’ என்று உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார்.
இன்று ஸ்டாலின் எழுதியிருக்கும்
கடிதத்தில், ‘முந்தைய ஆட்சிக்காலத்தில்
தேங்கிக் கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து,
அதற்கேற்ற வகையில் முதலீடுகளை ஈர்த்து,
புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலாக, மாநிலத்தில் பரவலான
அளவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி,
தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற
வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு
டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற
பொருளாதார இலக்கை நமது திராவிட
மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான
பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின்
தொடர்ச்சியாகத்தான் இன்று) தமிழ்நாட்டின் முதலமைச்சர்
என்ற முறையில் உங்களில் ஒருவனான
நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
தமிழ்நாட்டின்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு
அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய
நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம்
மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை
உருவாக்கும் வகையில் புகழும் தரமும்
மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
2024 ஜனவரி
மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும்
பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில்
ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கான
முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்தப்
புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துகிற வகையில், ஒருங்கிணைப்புப் பணிகளை
மேற்கொண்டு, அவற்றை முறையாகக் கண்காணித்து,
தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும்
பணியையும் திராவிட மாடல் அரசு
மேற்கொண்டு வருகிறது.
கடந்த
21-8-2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்
மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி
மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய்
51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 இலட்சத்து
6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட்
மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான
அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில்
தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான
முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த
3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள்
உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
ஆகஸ்ட்
29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில்
பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட்
31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன்பின், செப்டம்பர்
2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.
10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன
முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில்
தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். “ஃபார்ச்சூன்
500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து
உரையாடவிருக்கிறேன்.
செப்டம்பர்
7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான
மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. அமெரிக்கப்
பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக மாண்புமிகு தொழில்–முதலீட்டு ஊக்குவிப்பு
மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்
தம்பி டி.ஆர்.பி.ராஜா
முன்கூட்டியே அங்குச் சென்று ஏற்பாடுகளை
கவனித்து வருகிறார்.
ஆகஸ்ட்
27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண
நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி
அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப்
பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான்.
இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு
அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித்
தொடரவும், மக்கள் நலன் சார்ந்து
திராவிட மாடல் அரசு நிறைவேற்றி
வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும்
அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட
வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சர்
அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல்
நடைபெறுகிறது என்று மக்கள் தரும்
சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப்
பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை மாண்புமிகு
அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத்
தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை
உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.
நம் மீது விமர்சனம்
செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு
ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள
செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால்
பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர
வேண்டியதில்லை அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான்
என் மனது சிந்திக்கும்.
பார்வை கண்காணிக்கும்..’’ என்று தெரிவித்திருக்கிறார்.