Share via:
கோட் படத்தை பிரமாண்டமாக வெற்றிக் கொண்டாட்டத்துடன் தமிழக வெற்றிக்
கழகத்தின் மாநாட்டை நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கோட் படம் எதிர்பார்த்த
வெற்றி அடையவில்லை. அதோடு இம்மாதம் 23ம் தேதி நடத்த திட்டமிட்டுருந்த மாநாட்டுக்கு
காவல் துறை இழுத்தடித்தது. எனவே விஜய் அப்செட் ஆனதால் மாநாடு தள்ளிப் போகும் சூழல்
உருவானது. அடுத்த தேதி எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அக்டோபர் 27ம்
தேதியை அறிவித்திருக்கிறார். இந்த தேதிக்கும் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இன்று விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின்
கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு
மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே
வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக்
கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக
அரசியல் களத்தில்
புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும்
கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்
மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம்
மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும்
நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும்
கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள
மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும்
தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.
வாகை சூடுவோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த தேதிக்கு இப்போதே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே அவரது ரசிகர்களே, ‘’மிகச்சரியாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு தேதியை அறிவித்து
இருப்பது சரியாக இருக்காது. மக்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். அதோடு
தீபாவளியை ஒட்டி மழைக்காலம் ஆரம்பமாகிவிடும். நாம் எத்தனை செலவு செய்தாலும் மழையை எதிர்த்து
நிற்க முடியாது. ரசிகர்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும். எனவே, அக்டோபர் 15ம் தேதிக்குள்
நடத்துங்கள்”’ என்று குரல் கொடுக்கிறார்கள்.
என்ன காரணத்துகாக திட்டமிட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு
தேதி தேர்வு செய்யப்பட்டது என்பது புரியாமல் விழிக்கிறார்கள் ரசிகர்கள்.