Share via:
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று (அக்டோபர் 14) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் வலுப்பெற்று நகர்ந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்களும் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதால், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு நாளை முதல் வருகிற 18ம் தேதி வரை ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே (ஒர்க் ஃப்ரம் ஹோம்) பணிபுரியும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.