Share via:
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி அடையவில்லை
என்றாலும் அதிக சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறா. அதேநேரம், ஓ.பன்னீர், தினகரன்
ஆகியோருக்கு உருப்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆகவே பன்னீர் அணியில் இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், பெங்களூரு வா.புகழேந்தி
ஆகியோர் வெளியேறி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகக் கூறினார்கள். ஏற்கெனவே இந்த அணியில்
இருந்து வெளியேறிய கு.ப.கிருஷ்ணன் இவர்களுடன் இருக்கிறார்.
இந்த நிலையில் இவர்கள் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர்
இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கி மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது பேசிய புகழேந்தி, ’பழனிசாமியும், சசிகலாவும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.
ஏற்கெனவே பன்னீர்செல்வம், நான் ஒன்றிணைய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். டிடிவி
தினகரன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவர் வந்து இணைந்தாலும் வரவேற்போம். அனைவரும்
ஒத்துழைத்தால் இணைப்பு எளிதாக முடிந்துவிடும். ஒரு நாள் வேலைதான்.
அதிமுக தொண்டர்கள் கனவின் படி, மக்களின் விருப்பத்தின்படி அதிமுகவினர்
ஒன்றிணைந்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க காரணமாக அமைவோம். ஒருங்கிணைப்பு
குழு மாநில அளவில் மட்டுமல்லாது, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமித்து
கட்சியை ஒருங்கிணைக்க பாடுபடும்.
எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.
எல்லாம் பழனிசாமி கையில்தான் உள்ளது. அவர் 5 நிமிடம் யோசனை செய்தால், அதிமுகவுக்கு
விடிவு காலம் பிறக்கும். கட்சியை காப்பாற்றி ஆக வேண்டும். அதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக்கு
பழனிசாமி ஒப்புக்கொள்வார். கட்சி பிரிந்து இருந்தால் தேசிய கட்சி உள்ளே வந்துவிடும்.
தமிழகத்தை திராவிட கட்சிதான் ஆள வேண்டும்’ என்றார்.
அடுத்துப் பேசிய முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி, ‘எந்த கட்சியிலும்
சேராமல், நான் அதிமுக தான் என போராடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால்
திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும். எம்ஜிஆர் மறைவின்போது
அதிமுகவில் இருந்தவர்களுக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அவர்களின் இறுதி
ஆசை கூட அதிமுகவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது தான். எம்ஜிஆர், ஜெயலலிதா
காலத்தில் கட்சி வலுப்பெற உழைத்தவர்கள் பிற கட்சிகளில் அங்கம் வகித்தாலும் கூட அவர்களும்
அதிமுகவில் இணைய வேண்டும்…’ என்று வேண்டுகோள் வைத்தார்.
இவர்கள் அனைவரும் விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருக்கிறார்களாம்.
அப்போது எடப்பாடி இவர்களுடைய கோரிக்கையை ஏற்று, முதலில் இவர்கள மட்டும் அ.தி.மு.க.வில்
இணைத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறாராம். அதனாலே இந்த ஒன்றிணைப்பு நாடகம் என்கிறார்கள்.
சீக்கிரமா போய் சேருங்கப்பு.