Share via:
மதுவிலக்கின் மகிமைகளை பிகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள
வேண்டும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கும்
நிலையில், ‘ஏன் பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரி அரசுக்கும் பா.ஜ.க. ஆளும் மாநிலத்துக்கும்
அட்வைஸ் கொடுக்கும் ;தைரியம் இல்லையா என்று ராமதாஸை திட்டித் தீர்த்துவருகிறார்கள்.
ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’பிகாரில் மதுவிலக்கு
நடைமுறைப்படுத்தப்பட்டதால் அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்கள் மற்றும் பிரச்சினைகளில்
இருந்து மக்கள் விடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது. 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு
விற்பனையான மதுவின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது கடந்த 8 ஆண்டுகளில் மதுவால்
நிகழ்ந்திருக்க வேண்டிய 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை
எழுப்பும் போதெல்லாம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்,
அரசின் வருவாய் குறைந்து விடும் என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரிழப்பதால் இளம் கைம்பெண்களின்
எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக கைம்பெண்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை.
மாறாக, மதுவணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு
கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு மதுவணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர்.
எனவே பிகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும்
உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு உடன்பிறப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் அவரது கூட்டணிக் கட்சி ஆட்சி புரிகிறது. அங்கு
மது ஆறாக ஓடுகிறது. அதை நிறுத்தச்சொல்லி மோடிக்கு அழுத்தம் குடுங்க, சும்மா பேப்பரில்
எதையாவது கிறுக்கி அறிக்கைன்னு அனுப்பாதீங்க’ என்று கடுமையாக சட்டி வருகிறார்கள்.