Share via:
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும்
போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரேபரேலி தொகுதி வேட்பாளராக
ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி தேர்தலில் நிற்கவில்லை. அமேதி
தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரேபரேலி தொகுதியில்
ராகுல் காந்தி இன்றே வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய
தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு, காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த
2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர்
ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2-வது தொகுதியாக போட்டியிட்ட,
கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இப்போதைய தேர்தலில் இங்கு ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரும் ராகுலின்
தாயாருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை
வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்காவின் கணவர் வதேரா ஆசைப்பட்டார்.
அவருக்காக விளம்பரங்கள் செய்யப்பட்டன. தேவையில்லாத குழப்பம் வரும் என்பதாலே இந்த தேர்தலில்
பிரியங்கா காந்தியும் வதேராவும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இதுகுறித்து பிரியங்கா காந்தி, ‘’அமேதி தொகுதியில் கிஷோரி
லால் சர்மா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, அவர் வெற்றி பெற்று தொகுதிக்கு
நன்மைகள் செய்வார்’ என்று வாழ்த்தி இருக்கிறார்.