Share via:
நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு
எதிரான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் மக்களவை தேர்தலில் வேட்பாளர் படிவத்தில்
கையெழுத்து போடுவதற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்
விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் இந்திய தலைமை தேர்தல்
ஆணையத்தில் ஒரு புதிய மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ’பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்
தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில்
சூட் மனு விசாரணையில் இருப்பதை அடிப்படையாக கொண்டு தான் ஈரோடு இடைத்தேர்தலின் போது
எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று தெரிவித்து,
கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை கையெழுத்து போட வேண்டும் என்று அனுமதி வழங்கி
இருந்தது.
தற்போது விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான
வேட்பாளர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட தேர்தல் ஆணையம் தடை விதிக்க
வேண்டும். ஏனெனில் பொதுச்செயலாளர் வழக்கில் விசாரணை முடிந்து, இறுதியாக பிறப்பிக்கப்படும்
உத்தரவால் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் அபாய நிலை உள்ளது. அதாவது நீதிமன்றங்களில்
இருக்கும் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது
செல்லாது என்றோ, பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றோ, அல்லது
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றோ உத்தரவு பிற்பபிக்கப்படும்
பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் கையொப்பமிடப்பட்ட தேர்தல் படிவங்களும் செல்லாத
ஒன்றாக ஆகிவிடும்.
இதற்கு எடுத்துக்காட்டாக முந்தைய விவகாரம் ஒன்று உள்ளது. அதாவது,
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்த போது அவரது கை விரல் ரேகைகள் தேர்தல் படிவங்களில் பெற்றது செல்லாது
என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2016ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற
தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி ரத்து செய்யப்பட்டது. எனவே வரும் மக்களவை தேர்தலில்
அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித
சட்டச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின்
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடுவது உட்பட அனைத்து
விவகாரத்திற்கும் அவருக்கு உச்ச நீதிமன்றம் உரிய அதிகாரம் அளித்தது போன்று, தற்போதும்
அதேநிலை நீடிக்கும் வகையில் ஒரு உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்’’
என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு
தடை விதிக்கப்படும் என்று தெரியவருகிறது. இதேபோல் இரட்டை இலையை முடக்குவதற்கும் நீதிமன்றத்துக்கு
வழக்கு வர இருப்பதால் சின்னத்துக்கும் சிக்கல் ஏற்படப் போகிறதாம்.