Share via:
பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரத்தில் எல்லாம் தி.மு.க.வும் அதன்
தோழமைக் கட்சிகளும், ‘கோ பேக் மோடி’ என்று டிரெண்டிங் செய்வது வழக்கம். ஆனால், இன்றைய
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கல்பாக்கம் ஈணுலைத் திட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறார்.
நாம் சின்னத்தின் விவசாயி சின்னம் பறிபோக அண்ணாமலையே காரணம் என்று
பொதுவெளியில் நாம் தமிழர்கள் கடுமையாக விவாதிக்கும் நிலையில், இந்த எதிர்ப்பு முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கல்பாக்கத்திலுள்ள
அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈணுலையை
(Prototype Fast Breeder Reactor) பிரதமர் மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈணுலைகள் பேரழிவை ஏற்படுத்தும்
என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பாஜக அரசு அதனை இந்தியாவில்
முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும்.
1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சாராசரியாக
வெளியாகும் 27000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன.
ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து
வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள்
ஏறத்தாழ 48000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்திற்குள்
ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு
மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நிலம்
மாறிவிடும்.
இதனைக் கருத்திற்கொண்டே கடந்த 2019ஆம் ஆண்டு கூடங்குளத்தில் தற்காலிக
அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்தபோதும், கடந்த 2021ஆம் ஆண்டு
புதிய அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி வழங்கியபோதும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு
செய்ததுடன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ப் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது.
ஆனால், மக்கள் எதிர்ப்பினைத் துளியும் பொருட்படுத்தாது, எதேச்சதிகாரப்போக்குடன் கூடங்குளத்தில்
முதல் மற்றும் இரண்டாம் அணு உலைக்கான தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதித்தது
இந்திய ஒன்றிய அரசு. நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக்
கொள்ளாத நிலையில், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு அணுவுலைகளையே மூட வேண்டுமென்று
கோரிக்கை வைத்துவரும் நிலையில் தற்போது அதைவிடப் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்
500 மெகாவாட் ஈணுலையை கல்பாக்கத்தில் தொடங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அறிவியலில் வளர்ந்த வல்லாதிக்க நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு
கையாள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும்போது, நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான
தொழில்நுட்பத்தை இதுவரை பெற்றிடாத இந்தியா, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அணுவுலைகளை
அமைத்து வருவது, நேரடியாக தமிழர்கள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல்
போரேயாகும். ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, ஈணுலை, அணுக்கழிவு மையம் எனப்
பேராபத்து நிறைந்த அழிவுத் திட்டங்களையெல்லாம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதன் மூலம்
பாஜக அரசு இந்தியாவின் குப்பைத்தொட்டியாகவே தமிழ்நாட்டை மாற்றியுள்ளது.
பாஜகவினைக் கடுமையாக எதிர்ப்பதாக
கூறும் திமுக அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஈணுலையை தமிழ்நாட்டில் திறப்பது குறித்துத்
திட்டமிட்டு அமைதிகாப்பது ஏன்? இதுதான் பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும்
செயல்முறையா?’ என்று ஸ்டாலினுக்கும் கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான்.