Share via:
வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (நவ.16) வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநில கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற நவம்பர் 17ம் தேதி (நாளை மறுநாள்) வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.