Share via:
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பொது மக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதோடு தி.நகர், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் 17 தற்காலிக கண்காணப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும், போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய 4 இடங்களில் போலீசார் 19 ஒலிப்பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கியபடியும், தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு வழங்கியபடியும் இருப்பார்கள்.