Share via:
அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்ததால் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சி கொடியையோ ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறும்போது, ‘‘நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி. தேர்தல் வர உள்ளது. இருப்பினும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதே பதவியை பயன்படுத்தி எங்களை கட்சியில் இருந்து நீக்கியும், கட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.