Share via:
தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான 6 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த ஆண்டு (2023) இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே வரப்போகும் எனவே பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ்,பா.ஜ.க. என மும்முனைப் போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2வது கூட்டம் தெலுங்கானாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரங்கரெட்டி மாவட்டம் துக்குகூடா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அதோடு வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு ரூ5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மொத்தம் 6 வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.