Share via:
கடந்த தேர்தல் வரையிலும் அரசியலில் சீமானுக்கு ஒரு தனியிடம் இருந்தது.
அவரது வேட்பாளர்களால் யாருக்குப் பாதிப்பு என்ற அச்சம் திராவிடக் கட்சிகளுக்கு இருந்தது.
விஜய் வருகைக்குப் பிறகு சீமானை யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
ஆனாலும் கொஞ்சமும் கலங்காமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைப்
போட்டுவிட்டார். சக்கரம் போன்று சுற்றிக்கொண்டே இருக்கிறார். மார்ச் கடைசியில் திருத்தணியில்
பிரசாரத்தைத் தொடங்கினார். மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் சுற்றிக்கொண்டே
இருக்கிறார். எப்போதும் போல் சீமானுக்கும் கூட்டம் வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி,
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்துப் பேசும் நாம் தமிழர் நிர்வாகிகள், ‘’விஜய் பற்றி
நாங்கள் கவலைப்படவில்லை. இப்போது நான்கு முனைப் போட்டியால் யாருக்கு சாதகம், யாருக்கு
பாதகம் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இப்போது எங்களுடைய ஒரே லட்சியம், எப்படியாவது
சீமானை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். அதனால் காரைக்குடியில்
மட்டுமே அதிகம் கவனம் செலுத்துகிறோம்.
தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு 4 நாள்களுக்கு முன்பே அண்ணன் சீமானை
காரைக்குடிக்கு வரவழைத்து தொடர் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடுகிறோம். அதுபோக, தமிழ்நாட்டில்
முன்னணி நிர்வாகிகள் பலநூறு பேரை தொகுதிக்குள் இறக்கி வீடு வீடாக வாக்கு சேகரிப்பில்
ஈடுபடுத்தவுள்ளோம்…’’ என்கிறார்கள்.
காரைக்குடியில் சீமான் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா..?
தற்போது கணிக்கமுடியாத சூழல் நிலவினாலும் சீமானுக்கு வாய்ப்பு
குறைவுதான். அவரால் அதிகமான ஓட்டுகள் பிரியும் என்பது மட்டுமே உண்மை என்கிறார்கள்.
