Share via:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மணல்குவாரி அதிபர்கள், தொழில் அதிபர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆடிட்டரான சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை தங்களது தீவிர சோதனையை நடத்தி வருகிறார்கள். இப்படி தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது தி.மு.க. பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிற்கு இன்று காலை சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பலி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பிலும் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகின்றனர்.
சென்னையுடன் சேர்த்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது.