Share via:
நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது.
மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து 5 மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்து ஆய்வுப்பணிகளை அந்தந்த மாநிலங்களில் நடத்தி முடித்துள்ளன.
அதைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது செலவின தேர்தல் பார்வையாளர்களின் ஆலோசனைப்படி தேர்தல் வியூகங்களை தேர்தல் ஆணையம் வகுக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை டெல்லியில் நடைபெற உள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட உள்ளார்.