Share via:
ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கிருந்த 300 அடி பள்ளத்தில் பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 36 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர், பேருந்தில் இருந்த இறந்த 25 பேரின் உடல்களை முதல்கட்டமாக மீட்டெடுத்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து சரியாக தெரியாத நிலையில், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்து நடந்த பகுதி ஜம்மு என்.எச்.244ல் தோடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவி ராகினல்லா அசார் பகுதி என்று தெரியவந்துள்ளது.
மேலும் ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த முயற்சித்த போது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.