பொங்கலுக்கு ஸ்டாலின் அரசு 1000 ரூபாய் தரவில்லை என்ற வருத்தம் தமிழகத்தில் எல்லோருக்கும் உள்ளது. அதோடு பொருளாதாரம் சரியில்லை, வேலையில்லா பிரச்னை, சாதி வன்முறை என்று தமிழகத்தில் எக்கச்சக்க பிரச்னைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் மது விற்பனையில் ஸ்டாலின் அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. 725 கோடி ரூபாய் டார்கெட் அடைந்து வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 678 கோடி ரூபாய் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு 700 கோடி ரூபாய் டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அதை தாண்டி சாதனை படைத்துள்ளது ஸ்டாலின் அரசு. இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி, ‘தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும். ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது; தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலின் அவர்களைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன. அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இதற்கும் ஒரு விழா எடுக்காமல் இருந்தால் சரிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link