Share via:
விஜய் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழகத்தில் மின்வெட்டு நிலவி
வருகிறது. அதோடு, வழக்கத்தை விட அதிகமாக மின் கட்டணம் என்றும் புகார் வருகிறது. இந்த
நிலையில், மின்சாரத்தை தனியாருக்கு விஜய் ஒப்படைக்கப் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’த.வெ.க. ஆட்சி அமைந்ததில்
இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்… முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில்
பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை
அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம்
பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான
கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக்
கணக்கெடுக்கும் ரீடிங்g சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்’’
என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ‘’மு.க.ஸ்டாலின்
வாட்ஸ் ஆப்ல வந்த தகவலை நம்பி சொல்லியிருக்கிறார். 9.50 லட்சம் பேருக்கு 2 அல்லது 3
மடங்கு கட்டணம் அதிகமாக வந்துள்ளது. 3.70 லட்சம் புகார்கள் எல்லாம் வரவில்லை…’’ என்று
விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, ‘’கடந்த 2006 –
2011 ஆண்டுகால கலைஞர் ஆட்சியில் 5,900 MW அனல் மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன.
அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் புதிய அனல் மின் திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாத
நிலையில் 2021-ல் 503 MW-ஆக இருந்த மரபுசாரா மின் உற்பத்தியை திமுகழக ஆட்சியில்
17,393 MW-ஆக உயர்த்தினார் முகஸ்டாலின்.
ஆனால் தற்போது த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பின் அறிவிக்கப்படாத மின்தடை,
மின்வெட்டு, மின் கட்டணம் இரு மடங்கு உயர்வு, 200 யூனிட் இலவச மின்சாரத்தில் குளறுபடி,
பல ஆண்டுகளாக கேங் மேன் பதவியில் கடினமாக உழைத்து வரும் 5000 இளைஞர்களுக்கு பணி ஆணை
வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு கரூரில் 31 பேருக்கு வேலை வழங்க கூடாது
என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் உச்சநீதிமன்றம் செல்ல துடிப்பது ஏன் ?
மின்துறையையே தனியாருக்கு விற்க என்ன அவசரம் CM sir?
அதுபோல் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்திட்டம், பல நிறுவனங்களின்
மூலம் பல ஆயிரம் MW உற்பத்தி பணிகள் நடந்து கொண்டிருந்ததை இந்த அரசு முடக்கி வைத்திருப்பதோடு,
மின் தட்டுபாடு இருப்பதான மாய தோற்றத்தை உருவாக்கி, அதானி போன்ற நிறுவனங்களிடம் அதிக
விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவருவது உங்களுக்கு
தெரியுமா CM sir ?
சேலத்தில் குடிநீர் வினியோகம் தனியார் மயமாக்கம், டாஸ்மாக்கை தனியார்
மயமாக்க முயற்சி என்ற வரிசையில் ஒட்டுமொத்த மின் துறையையே அதானியிடம் தாரை வார்க்க
அரை காக்கி ட்ரவுசர் அமைச்சர் வலிந்து கட்டி செயல்படுவது தமிழக மக்களுக்கு செய்யும்
துரோகம் இல்லையா CM sir ? நம்பி கொடுத்த தமிழ்நாட்டை உங்கள் நண்பர்களுக்கு கொடுக்க
பாரத பிரதமர் மோடி வழியில் முடிவெடுத்து விட்டீர்களா CM Sir ?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
