News

Follow Us

தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். அதோடு பொதிகை என்ற பெயரில் இயங்கிவந்த சென்னை தூர்தர்சனுக்கு, ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவையை தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அப்படியொரு அறிவிப்பு பிரதமர் முன்பு ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனாலும் தமிழகத்திலும் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பிரதமர் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பிரதமர், சுவாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயணத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து பிரதமர் மோடி, ராமேசுவரம் மாதா அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும்பிரதமர், பகல் 2.45 மணிக்கு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுகிறார்.

தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இரவு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

நாளை காலை ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் பிரதமர், அங்குகாலை 9.30 முதல் 10 மணி வரை தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம்பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமரின் யாத்திரை மூலம் தமிழகத்திலிருந்து நிறைய பேர் யாத்திரையாக அயோத்திக்குக் கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கும் இந்த விசிட் உதவி செய்கிறதா என்பதை பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link