Share via:
அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைத்து தீவிர தேர்தல் பிரசாரத்தில்
இறங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திலும் தன்னுடைய வாக்கு வேட்டையைத் தொடங்கும்
வகையில் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்.
இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமரின்
எக்ஸ் தளத்தில், ‘எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு
தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு
அப்பால் இதயங்களை வென்றன. அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது’ என பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கேலோ விளையாட்டுப்
போட்டியை 19ம் தேதி தொடங்கி வைக்க வருகிறார். அதன்பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு ராமேஸ்வரம்
கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டுசெல்கிறார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் செல்கிறார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த விவகாரம் அரசியலாக மாறிவருகிறது.
ஆகவே, இதனை சரிக்கட்டும் வகையில் ஆன்மிகத்தைப் பரப்ப வருகிறாராம்.
பிரதமரின் நடவடிக்கை வெற்றி அடையுமா அல்லது மீண்டும் கோ பேக் மோடி
டிரெண்டிங் ஆகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.