News

Follow Us

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கினார்.

கடந்த டிசம்பர் மாதம் 3  மற்றும் 4 (2023) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (ஜன.5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் பேரிடர்  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் இருந்தார்.

அதே போல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொஹைதீன், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜன.5) சந்தித்தார். அப்போது மிக்ஜாம் பேரிடர் நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link