Share via:
மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்களில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு புஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணியளவில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் 18ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீமூட்டப்படுகிறது.
அதைத்தொடர்ந்து நாளை (நவ.17) அதிகாலை 4 மணியளவில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துகிறார். மேலும் நாளை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 12 மணிநேரம் வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.