Share via:
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கட்டணத்தை வசூலிப்பதிலேயே சுங்கச்சாவடிகள் குறியாக உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை நெடுஞ்சாலையில் கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் சாலைகளை சரி செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையை முறையாக பராமரிக்காமல் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனமாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இவ்வழக்கை ஒத்தி வைத்தனர்.