Share via:
திமுக ஆட்சி காலத்தில் கவர்னர் உரை உருப்படியாக நடந்ததே இல்லை.
முதல் நாளே சட்டசபை முட்டிக் கொள்ளும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அடுத்து தேசியகீதம்
பாடுவதற்கு விஜய் ஒப்புக்கொண்டதால், கவர்னர் உரையை மாற்றாமல் படித்தார் என்கிறார்கள்.
இது குறித்து திமுக ஐ.டி. விங், ‘’ஆளுநர் உரையின் தொடக்கத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின்
நெடுங்கால மரபு. இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு
பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார்,
செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது
தி.மு.கழகம்.
தற்போதைய டம்மி சி.எம். அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக
தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது. “‘மாற்றம் – மாற்றம்’’
என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற
மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதற்கு தவெகவினர், ‘’தேசிய கீதம் முன்னால் பாடியது அவளோ பெரிய
விஷயமா? அதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்பதை எப்படி வசதியாக மறந்துவிட்டீர்கள்?
பல காலம் கழித்து ஆளுநர் முழுசா உரையை படித்து இருக்கிறார், அதற்கு எல்லாம் டம்மி சி.எம்.
என்று விமர்சிக்கலாமா?’’ என்று கொதிக்கிறார்கள்.
அதேநேரம் அரசியல் விமர்சகர்கள், ‘’தவெக உரையில் எந்த வார்த்தையையும்
நீக்காமல், எந்த வார்த்தையையும் சேர்க்காமல் முழுமையாக வாசித்து, சட்டப்பேரவை நிகழ்வு
முடிந்தவுடன் வெளியேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வா என்பது தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில், பாஜக ஆளாத ஒரு மாநிலத்தில் இத்தகைய சம்பவம் நடைபெறுவது இயல்புக்கு
மாறானதாகவே தோன்றுகிறது. இது பாஜக அரசு போன்றே தெரிகிறது’’ என்கிறார்கள்.
