Share via:
ஐ.பி.எல். கிரிக்கெட் உலகில் யாருமே எதிர்பாராத அதிரடி திருப்பம்
என்றால், அது இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பலமான அணியான மும்பை இந்தியன்ஸ்
அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, அவருக்குப்
பதிலாக குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததுதான்.
இந்த விவகாரம் ஹிட்மேன் ரோகித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியைக்
கொடுத்துள்ளது. இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத மும்பை அணியின் வீரர்களான சூர்யகுமார்
யாதவ், பும்ரா போன்றவர்களும் அதிர்ந்துபோய் நிற்கிறார்கள்.
அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் மற்றும்
ட்விட்டர் பக்கத்தில் இதயம் உடைந்தது போன்ற எமோஜியை ஸ்டோரியாகவும் போஸ்டாகவும் பதிவுட்டுள்ளார்.
பும்ரா வெளிப்படையாகவே ரோகித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 முறை சாம்பியன் கோப்பை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவுக்கு
மும்பை அணி நிர்வாகம் துரோகம் செய்துவிட்டதாகவும் அதற்கு பின்னணியில் சச்சின் டெண்டுல்கர்
இருப்பதாகவும் ரோகித் ரசிகர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
ஏனென்றால், குஜராத் அணிக்கு ஹிர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கும்
வகையில், அங்கு சுப்மன் கில் கேப்டனாக மாற முடியாது. எனவே, ஹிர்திக் பாண்டியாவை வேறு
அணிக்கு மாற்றினால் மட்டுமே சுப்மன் கில்லுக்கு பதவி கிடைக்கும் என்று திட்டமிட்டு
மும்பை அணிக்கு அவர் அழுத்தம் கொடுத்து இந்த மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை உண்மையென்று நிரூபிப்பதைப் போலவே இப்போது சுப்மன் ஹில் குஜராத் டைட்டன்
அணிக்கு கேப்டன் ஆகியிருக்கிறார்.
சுப்மன் கில்லுக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் என்ன உறவு என்பது
எல்லோருக்குமே தெரியும் என்பதால், இதை ஒரு திட்டமிட்ட துரோகம் என்று மும்பை ரசிகர்களும்
ரோகித் சர்மா ஆதரவாளர்களும் மீம்ஸ் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், இதற்கு சச்சின் அல்லது சுப்மன் கில் தரப்பு எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
இத்தனை ஆண்டுகள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 2024ம் ஆண்டு
ஐ.பி.எல். போட்டியின்போது மைதானத்தில் இந்த அறிவிப்பை அவரே செய்திருந்தால் இப்படியெல்லாம்
சர்ச்சை கிளம்பியிருக்காது. உலகக் கோப்பை தோல்வியால் நொந்துபோயிருந்த ரோகித்துக்கு
மீண்டும் ஒரு இடி விழுந்திருக்கிறது.
மீண்டு வரட்டும் ஹிட்மேன்.