Share via:
ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நாக்ஸ் மேக்ஈவன் என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்தான். டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலையில் படித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன், ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்ததோடு பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளான். தான் வசித்து பகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த சிறுவன் நாக்ஸ் மேக்ஈவன், தன்னார்வலராகவும் செயலாற்றி வந்துள்ளான்.
இந்நிலையில் 5 கி.மீட்டர் ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டிருந்த போது அவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளான். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற அவசரகால சிகிச்சை குழுவினர் சிறுவனை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். உயிரிழந்த சிறுவன் நாக்ஸ் மேக்ஈவனின் இறுதி சடங்கிற்காக சக பள்ளி மாணவர்கள் ரூ.55 லட்சம் திரட்டி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலிப் ஒயிட் என்ற 17 வயது மாணவர் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சரிந்து விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.