Share via:
மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு ஆதரவாக பல பிரபல்லங்கள் தொடர்ந்து
களத்தில் குதித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர் பெற்ற பத்மஸ்ரீ
விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை
வீரர் விஜேந்தர் சிங்கும் சாக்ஷிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
, சாக்ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு
வீரராக சாக்ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில்
தங்கம் வென்ற அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால், அது அவருக்குக்
கிடைக்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால், உலக அளவில்
இந்தியாவின் பிம்பம் உயருமா, குறையுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன விவகாரம் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல்.
பா.ஜ.க.வை சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய
மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷண் சரண்
சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அவரும் பதவியை இழந்தார். அப்போதே, பிரிஜ்
பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வைத்த கோரிக்கையை
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளரான சஞ்ஜய் சிங்
புதிய தலைவராக தேர்வாகி உள்ளார். 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில்
பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே அதிர்ச்சி அடைந்த சாக்ஷி, ’’நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து
போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான
சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்.
நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை’’ என்று
கண்ணீர் சிந்தினார்.
இதையடுத்து சாக்ஷிக்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கும்
முடிவை எடுத்துள்ளார் பஜ்ரங் புனியா. இப்போது விஜயேந்தர் சிங்கும் போராட்டத்துக்கு
ஆதரவு கொடுத்துள்ளார்.
இனியாவது அரசு விழித்துக்கொள்ளுமா..?