Share via:
தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு அழச்செய்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் என்றாலே கம்பீரம் என்று அர்த்தம். அவரது கணீர் குரலும் மிரட்டும் கண் விழிகளும், முரட்டுத்தனமான உடலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று தனி இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. கிராமத்துக் கதை என்றாலும், காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் என்றாலும் சரி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்சாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த்தான். குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் அவர் அடித்து உதைக்கும் போது திரையரங்குகளில் விசில் பறக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலகட்டத்தில் அவர்களுக்கு சவாலாக இருந்தவர்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. சினிமா மட்டுமல்லாம் அரசியலிலும் கால் பதித்து வெற்றியை குவித்த அவரின் தற்போதைய நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகையின் போது விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் 2 மகன்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கேப்டன் விஜயகாந்த் எப்படி மெலிந்துவிட்டார்? அவரது கம்பீர தோற்றம் எங்கே சென்றது? அவர் எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.