Share via:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம் (ஜனவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அன்று நண்பகல் 12.20 மணியளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குழு நிர்வாகிகள் பா.பிரகாஷ், ராமராஜசேகர், ராம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இக்குடமுழுக்க விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.