Share via:
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு (நவ.7) நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகநாயகனும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை 68வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவக்குமார் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறும்போது, ‘‘நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.
அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார் என்று பெருமிதத்தோடு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.
மேலும் கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் அதோடு ‘டூப்’ போடாமல் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் என்று தெரிவித்துள்ளார்.
‘மீண்டும் ஒரு சூர்யோதயம்’ -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் என்று தெரிவித்துள்ளார்.
1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள்- என தொடர்ந்து 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்த போது அத்திரைப்படத்தில் நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்.
வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல் ! என்று சிவக்குமார் பாராட்டி பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் மறைந்த ஆப்ரகாம் லிங்கனே 2 முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்.
அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள். நூறாண்டு நீவிர் வாழ்க என்று தனது வாழ்த்துச் செய்தியில் நடிகர் சிவக்குமார் பதிவிட்டுள்ளார்.

