Share via:
உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் இன்னமும் பல நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மை லார்டு, யுவர் லார்ட்ஷிப் என்ற வார்த்தைகளை பயன்படுத்திதான் வருவதாக நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளான போபன்னா மற்றும் நரசிம்ஹா ஆகியோர் ஒரு வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது, மூத்த வழக்கறிஞர் ஒருவர், தொடர்ந்து ‘மை லார்ட்’ என்ற வார்த்தையை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
இதனால் பொறுமை இழந்த நீதிபதி நரசிம்ஹா, ‘மை லார்ட்’ என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள் என்று கூறியதுடன், அப்படி கூறுவதை நிறுத்திவிட்டால் என் ஊதியத்தில் பாதியை தருவதாக கூறினார். தொடர்ந்து பேசி அவர் சார் என்று அழைத்தாலே போதும், மீண்டும் ‘மை லார்ட்’ என்று அழைத்தால், அதன் எண்ணிக்கையை பதிவு செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்ஹாவின் அதிருப்தியான வார்த்தைகளால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.