Share via:
பழம்பெரும் நடிகரான பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது 70. ரகு என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கரக்காட்டக்காரன் திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதோடு கோபுரவாசலிலே, தனி ஒருவன், புலி, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜூனியர் பாலையா பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிசடங்கு நடைபெறும் என்று ஜூனியர் பாலையாவின் குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

