Share via:
போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம் என்று கூறிய இஸ்ரேல் நாட்டு பிரதமர் திட்டவட்டமாக போர் நிறுத்தத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகள் தலையிட்டும் இன்னும் போர் நின்றபாடில்லை. இருதரப்பிலும் உயிர்சேதம் அதிகரித்துள்ள நிலையில் பணயக் கைதிகளும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால் காஸா நகரம் முற்றிலுமாக தரைமட்டமான நிலையில் தற்போது அங்கு தரைவழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஐ.நா. கூட்டத்தில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்த போது இஸ்ரேல் நாட்டு வெளியுறுவுத்துறை அமைச்சர் அதை முற்றிலும் மறுத்து, ஹமாஸ் அமைப்பை துடைத்தெறிவோம் என்று தனது முடிவை தெரிவித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, ‘‘காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாடு என்னவென்றால் போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாசிடம் சரணடைவதற்கு சமம். பயங்கரவாதத்துக்கு அடிபணிவது போல ஆகிவிடும். இது நடக்காது. ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இந்த போரில் வெற்ற பெறும் வரை இஸ்ரேல் போராடும்’’ என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் நேற்று (அக்.30) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் காஸா பகுதியில் கடந்த 7ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அதிகபட்சமாக 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் என மொத்தம் 8,306 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 21,048 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து பாலஸ்தீன பிரதமர் முஹம்மது கூறும்போது, ‘‘தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீரால் பரவும் நோய்கள் மற்றும் தோல் நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கள் மக்கள் மீதான போரை நிறுத்துங்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

