Share via:
மராட்டிய மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண் குழந்தைகள் பிறந்தாலே செலவுதான் என்று பிற்போக்குத்தனமாக பேசுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி தங்கள் விஸ்வரூப வளர்ச்சியால் உலகையே கைதூக்கி நிறுத்தி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைக்காகவும் மராட்டிய மாநில அரசு ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டுகளை வைத்துள்ள குடும்பத்தாரின் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தால் முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதன் பிறகு 1ம் வகுப்பில் சேரும் போது 6 ஆயிரம் ரூபாயும், 6ம் வகுப்பு சேரும்போது 7 ஆயிரம் ரூபாயும், 9ம் வகுப்பில் 8 ஆயிரம் ரூபாயும், இறுதியாக 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில் ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் அளவுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொகை பெண் குழந்தைகள் வளர்ந்து அவர்களது எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்கு செலவிட ஏதுவாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் பயனாளிகள்.