Share via:
காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலால் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் மழுப்பலான பதிலை சொல்லி வருகிறது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் பல தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?
உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.
ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்’’ என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.