Share via:
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்ற அவர், செல்லும் வழியில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆய்வுக்கூட்டத்தில் 28 துறைகளைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தென் சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் (அக்.19) ரத்து செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது என்ற செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்று வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.