Share via:
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பணம் பெறுவதற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 2 மாதங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர் இசேவை மையத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும், தகுதியான ஒருவர் கூட நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து செயலாக்க அதிகாரிகள் கூறுகையில், கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 9 லட்சத்து 50 ஆயிரத்து மேற்பட்ட மகளிர் விண்ணப்பித்துள்ளனர். குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்காதவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வருகிற 24ம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.