Share via:
தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸ் தன் வசம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அக்கட்சியை இந்தியா கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளும் நடந்து வருவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை இந்தியா கூட்டணி நிர்வாகிகள் தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கா அனைத்துக் கட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்கும் திட்டத்தின்படி தெலுங்குதேசம் கட்சியை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சிந்தா மோகன், ‘‘சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு நல்ல மனிதர். சகிப்புத்தன்மைக்கு அப்பால் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர்’’ என்று குற்றம்சாட்டி பேசினார்.
மேலும் ‘‘தெலுங்கு தேசம் கட்சியையும் அதனுடன் சமீபத்தில் இணைந்துள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியையும் இந்தியா கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது. தற்போது ஆந்திராவை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 15 சதவீதம் வரையிலான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.